செய்திகள்
ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்தி தடியடி

ஹாங்காங்கில் பதற்றம் - போராட்டக்காரர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு

Published On 2019-11-11 21:40 GMT   |   Update On 2019-11-11 21:40 GMT
ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்தி துப்பாக்கிச்சூட்டில் வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹாங்காங்:

ஹாங்காங்கில் சீனாவிடம் இருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நடந்து வரும் இந்த போராட்டத்தில் பலமுறை வன்முறை வெடித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக அடுத்தடுத்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. போராட்டத்தின் போது, போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஓடியபோது கட்டிடத்தின் மேல் இருந்து விழுந்ததில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது. இந்த நிலையில் ஹாங்காங்கின் வடகிழக்கு பகுதியில் சாய்வான் நகரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசாருடன் போராட்டக்காரர்கள் சிலர் மோதலில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ்காரர் ஒருவர் தனது துப்பாக்கியை எடுத்து, ஒரு வாலிபரை சுட்டார். இதில் அவர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அந்த வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போராட்டம் தொடங்கிய நாள் முதல் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு காயம் அடைந்த 3-வது நபர் இவர் ஆவார்.

இதற்கிடையே மா ஓன் சான் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக ஆர்வலர்களிடம் சீன ஆதரவாளர் ஒருவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்களில் ஒருவர் சீன ஆதரவாளரின் மீது வேதிப்பொருளை ஊற்றி தீவைத்தனர்.
Tags:    

Similar News