செய்திகள்
கைது

விழுப்புரம் அருகே மணல் கடத்திய 3 பேர் கைது

Published On 2020-09-13 12:11 GMT   |   Update On 2020-09-13 12:11 GMT
விழுப்புரம் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மணல் கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசின் உதவியுடன் விழுப்புரம் அருகே பிடாகம் பெட்ரோல் பங்க் அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரியையும், லாரிக்கு முன்னால் வந்து கொண்டிருந்த ஒரு காரையும் போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்தனர். போலீசாரை பார்த்ததும் லாரியை ஓட்டி வந்த டிரைவர், கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். பின்னர் அந்த காரில் இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள், விழுப்புரம் அருகே பேரங்கியூரை சேர்ந்த வெங்கடாஜலபதி (வயது 36), பைத்தாம்பாடியை சேர்ந்த விக்னேஷ் (26), ராஜ்குமார் (38) என்பதும், இவர்கள் மூலமாக பண்ருட்டி அருகே உள்ள பைத்தாம்பாடி தென்பெண்ணையாற்றில் இருந்து லாரியில் மணல் கடத்தி வரப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் காரை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே பைத்தாம்பாடி தென்பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்திக்கொண்டு சென்ற மற்றொரு லாரியை பேரங்கியூர் பகுதியில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் மடக்கிப்பிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த லாரி, பைத்தாம்பாடி ராஜ்குமாருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது திருவெண்ணெய்நல்லூர் போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News