உள்ளூர் செய்திகள்
.

ரேசன் கடையில் பொதுமக்கள் முற்றுகை

Published On 2022-05-05 10:10 GMT   |   Update On 2022-05-05 10:10 GMT
சேலம் காமநாயக்கன்பட்டியில் ரேசன் கடையில் பொருட்கள் வழங்காததால் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:

சேலம் புது ரோடு காமநாயக்கன்பட்டி 1-வது வார்டில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையில் 500- க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். ஆனால் இந்த ரேஷன் கடையில் சரியாக பொருட்கள் வழங்கவில்லை என்று பொதுமக்கள் ஏற்கனவே குற்றம் சாட்டி வந்தனர். 

குறிப்பாக கைரேகை பதிவு எந்திரம் வேலை செய்யவில்லை என்றும், பொருள்கள் வரவில்லை என்றும் கூறி பொருள்களை வழங்காமல் விற்பனையாளர் இழுத்தடித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று பொருட்கள் வாங்க  பொதுமக்கள் கடை முன்பு திரண்டு இருந்தனர். ஆனால் பொருட்கள் வழங்காமல் கைரேகை பதிவு எந்திரம் பழுதாகிவிட்டது என்று விற்பனையாளர் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  மேலும் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த ரேஷன் கடை முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இது பற்றி உயர் அதிகாரியிடம் தெரிவித்தும்  நடவடிக்கை எடுக்கவில்லை  என்று போராட்டம் நடத்திய பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News