தொழில்நுட்பம்
ஆன்லைன் மூலம் பான் கார்டு வழங்க ஏற்பாடு
ஆன்லைன் மூலம் உடனடியாக பான் கார்டு வழங்கும் புதிய திட்டத்தை வருமான வரித்துறை துவங்க இருக்கிறது.
வருமான வரித்துறை சார்பில் நிரந்தர கணக்கு எண்ணுடன் ‘பான் கார்டு’ வழங்கப்பட்டு வருகிறது. இந்த அட்டையை பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். பரிசீலனைக்கு பிறகு சில நாட்கள் கழித்து பான் கார்டு வழங்கப்படுகிறது.
இந்த காலதாமதத்தை தவிர்க்க ஆன்லைன் மூலம் உடனடியாக பான்கார்டு வழங்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை இன்னும் சில வாரங்களில் அமலுக்கு வர உள்ளது. அதன்படி ஆன்லைனில் பான்கார்டு பெற ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை மட்டுமே பதிவு செய்தால் போதும்.
அதன் மூலம் விண்ணப்பதாரரின் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி உள்ளிட்ட தகவல்கள் மூலம் உடனடியாக பான் கார்டு வழங்கப்படும். பான் கார்டு பெற வேறு எந்த ஆவணங்களும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8 நாட்களில் ஆன்லைன் மூலம் உடனடியாக 62 ஆயிரம் பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் சில வாரங்களில் நாடு முழுவதும் வரி செலுத்தும் அனைவருக்கும் இத்தகைய முறையில் பான் கார்டுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு பான்கார்டில் ஆதார் அட்டை இணைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அதிக அளவில் பண பரிவர்த்தனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.