வழிபாடு
தெப்பத்தில் தேவியர்களுடன் வியூக சுந்தரராஜ பெருமாள்.

மாசி மகம் தெப்ப உற்சவத்தையொட்டி கூடலழகர் பெருமாள் தெப்பக்குளத்தில் எழுந்தருளினார்

Published On 2022-02-18 04:56 GMT   |   Update On 2022-02-18 04:56 GMT
மாசி மகம் தெப்ப உற்சவத்தையொட்டி மதுரை கூடலழகர் பெருமாள் டவுன்ஹால் ரோடு தெப்பக்குளத்தில் எழுந்தருளினார். அதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கூடலழகர் பெருமாள் கோவில் மாசி திருவிழா மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோவில் மாசிமகம் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கூடலழகர் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழாவில் தெப்பத்திருவிழாவையொட்டி பல்லக்கில் முட்டுத் தள்ளுதல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதை யொட்டி கூடலழகர் பெருமாள் கோவிலில் இருந்து புறப் பாடாகி டவுன்ஹால் ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் எழுந்தருளினார். அங்கு பல்லக்கில் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் விழாவின் சிகர நிகழ்ச்சியான மாசி மகம் தெப்ப உற்சவம் நேற்று இரவு நடந்தது. இதற்காக டவுன்ஹால் ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தை சுற்றிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பின்னர் கூடலழகர் பெருமாள் தங்க சிவிக்கையில் உபய நாச்சியாருடன் நேற்று மாலை கோவிலில் இருந்து தெப்பத்திற்கு வந்தடைந்தார்.

அங்கு இரவு 7 மணிக்கு தெப்பம் சுற்றுதல் நடந்தது. அப்போது அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பெருமாள், அம்பாளுடன் தெப்பக்குளத்திற்குள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர்கள் அனிதா, விஜயன், கோவில் மழைநீர் சேகரிப்பு கமிட்டி தலைவர் சுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர். மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் குமரதுரை முன்னிலை வகித்தார். ஜெயபிரபா ஜூவல்லர்ஸ், காவேரி மகால் உரிமையாளர் கே.வி.கே.ஆர்.பிரபாகரன் வரவேற்றார். திடீர்நகர் போலீஸ் உதவி கமிஷனர் ரவீந்திரபிரகாஷ் விழாவை தொடங்கி வைத்தார். மாநகராட்சி தெற்கு மண்டல அதிகாரி தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News