செய்திகள்
கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் மற்றும் அதிகாரிகள்.

தடுப்பு பணிகளால் கொரோனா தொற்று குறைகிறது-அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

Published On 2021-06-11 10:29 GMT   |   Update On 2021-06-11 10:29 GMT
நோய்தொற்று கட்டுப்பாடுகளை மீறியதாக 5,667 பேருக்கும், தனிநபர் விதிமீறிய 5,419 பேருக்கும் மற்றும் 304 வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஊரக வளர்ச்சித்துறை அரசு முதன்மை செயலாளர் கோபால், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையாளர் பழனிசாமி, நகர் ஊரமைப்பு இயக்குனர் கணேசன், திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக 13 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 265 கிராம ஊராட்சிகளில் நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. ஊரகப்பகுதிகளில் மக்கள் தொகை 17 லட்சத்து 55 ஆயிரம் ஆகும். கடந்த மாதம் 27-ந்தேதி 629 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது தொற்று பாதிப்பு 298 ஆக குறைந்துள்ளது. இதுவரை 13 ஆயிரத்து 412 பேர் கிராமப்புற பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 10,740 பேர் குணமடைந்துள்ளனர். 2,633 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,575 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

48 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து ஊராட்சி பணியாளர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா ஒரு உதவி மையமும், 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா ஒரு உதவி மையமும் செயல்பட்டு வருகிறது.

வீடு, வீடாக நோய்த்தொற்று உள்ளவர்களை கணக்கீடு செய்ய 265 குழுக்கள் அமைக்கப்பட்டு 3,219 பேர் களப்பணியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். ஊரகப்பகுதிகளில் 51 ஆயிரத்து 296 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நோய் தடுப்பு பணிகளில் 6,665 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நோய்தொற்று கட்டுப்பாடுகளை மீறியதாக 5,667 பேருக்கும், தனிநபர் விதிமீறிய 5,419 பேருக்கும் மற்றும் 304 வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.34 லட்சத்து 81 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வாழ்வாதார இயக்கம் திருப்பூர் மாவட்ட மேலாண்மை அலகு மூலமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான சுய உதவி குழு கடனுக்கான காசோலையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் தலா ரூ.2,000 வீதம் 111 மூன்றாம் பாலினத்தவருக்கு நிவாரண உதவி தொகைக்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர்.
Tags:    

Similar News