செய்திகள்
டிடிவி தினகரன்

அமமுக முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கவனமாக செயல்பட வேண்டும்- தினகரன்

Published On 2021-05-01 06:57 GMT   |   Update On 2021-05-01 06:57 GMT
கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு கடுமையாக இருக்கிற நேரத்தில், ஒழுங்கான முகக்கவசம் அணிவது, போதுமான சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை முறையாக பின் பற்ற வேண்டும்.

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக இருக்கின்றன.

தேர்தல் களத்தில் உங்கள் ஒவ்வொருவரின் கடுமையான உழைப்புக்கான பலன் நமது இயக்கத்திற்கு கிடைக்க இருக்கிறது. தமிழக மக்களின் மனங்களில் நமக்கென்று தனியிடம் இருப்பது உறுதியாகப் போகிறது.

நம் லட்சியத்தை அடைந்து, அம்மா மக்கள் நலக் கொள்கைகளை உயர்த்தி பிடித்து, தமிழக மக்களின் அன்பைப் பெற்ற தனிப்பெரும் சக்தியாக நாம் எழுந்து நிற்கப் போகிறோம்.


அத்தகைய மகத்தான வெற்றியை உறுதி செய்ய, நாளை வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருக்கிற கழக கண்மணிகள் முழு கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். எந்தவிதமான கவனச் சிதறலுக்கும் இடம் கொடுக்காமல், கடைசி வாக்கு எண்ணி முடிக்கப்படும் வரையிலும் கழக முகவர்கள் அந்தந்த மையங்களில் இருந்திட வேண்டும்.

கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு கடுமையாக இருக்கிற நேரத்தில், ஒழுங்கான முகக்கவசம் அணிவது, போதுமான சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை முறையாக பின் பற்ற வேண்டும்.

கழக கண்மணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல், நம்முடைய இலக்கினை வென்றெடுத்து வாகை சூடினோம்’ என்பதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிற செய்தியாக இருக்கும். அத்தகைய சாதனையை நிகழ்த்திக்காட்டி புதிய சரித்திரம் படைத்திடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News