ஆன்மிகம்
பிளாஞ்சேரி காமாட்சி அம்மன் உடனாய கைலாசநாதர் கோவில் உட்புற முகப்பு தோற்றம்.

தோஷங்களை நீக்கும் பிளாஞ்சேரி கைலாசநாதர்

Published On 2021-03-17 04:10 GMT   |   Update On 2021-03-17 04:10 GMT
ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம்(உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கண்டம்) இருப்பவர்களுக்கு சிறந்த பரிகாரத் தலம் பிளாஞ்சேரி கைலாசநாதர் ஆலயமாகும்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரத்தி்ல் இருந்து வடக்கே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பிளாஞ்சேரி. இங்கு காமாட்சியம்மன் சமேதராக கோவில் கொண்டு இருக்கிறார் அருள்மிகு கைலாசநாதர். இந்தக் கோவிலில் தனித்தனி சன்னதிகளில் அஷ்ட பைரவர்களும் அருள்பாலிக்க, சரபசூலினியும் குடிகொண்டிருக்கிறாள்.

பல்வேறு சிறப்புகள் பெற்ற மிகவும் பழமையான சிவாலயம் பிளாஞ்சேரி கைலாசநாதர் திருக்கோவில். இங்கு நடைபெறும் ஜயமங்களா யாகத்தில் கலந்து கொண்டால் திருஷ்டி தோஷங்கள் அகலும், திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும், வம்ச விருத்தி உண்டாகும், இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம், வழக்குகள் சாதகமாகும்.

அதேபோல், ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம்(உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கண்டம்) இருப்பவர்களுக்கும் சிறந்த பரிகாரத் தலம் இதுவாகும். அவர்கள், தேய்பிறை அஷ்டமியன்று மாலை ஆறு மணியளவில் அஷ்ட பைரவர்களுக்கு நடைபெறும் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால், தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

அற்புதமான திருக்கதை, சாந்நித்தியம் மிகுந்த திருக்கோயில், அருள் வழங்கும் வழிபாடுகள்... இத்தகைய சிறப்புகள் மிகுந்த பிளாஞ்சேரி தலத்துக்கு நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வளமான வாழ்வைப் பெறுவீர்கள்!

இந்த கோவிலில் பவுர்ணமிதோறும் மாலை 5 மணியளவில் ஜய மங்களா மகா யாகம் நடைபெறும். அப்போது பிராச முனிவரும் சூட்சும வடிவில் வந்து அம்பிகையை வழிபடுவதாக ஐதீகம். பக்தர்கள் தாங்கள் தொடங்கும் காரியங்கள் தொடர்பாக அம்பிகை சரப சூலினியின் உத்தரவு கேட்க வருவார்கள். அவர்கள் கொண்டு வரும் எலுமிச்சைப்பழம் அம்பிகையின் திருமுடியில் வைக்கப்படும். `காரியத்தைத் தொடங்கலாம்’ என்பது அன்னையின் சித்தமானால், அந்த எலுமிச்சை அம்பிகையின் திருமுடியில் இருந்து தானாகவே இறங்கி விழுவது, இத்தலத்துக்கே உரிய அற்புதமாகும்.
Tags:    

Similar News