ஆன்மிகம்
மத்தூர் மாரியம்மன்

குடிப்பழக்கத்தில் இருந்து மீள வேண்டுமா? அப்ப இந்த கோவிலுக்கு வாங்க

Published On 2021-02-24 08:37 GMT   |   Update On 2021-02-24 08:37 GMT
குடிபோதைக்கு அடிமையானவர்கள் மத்தூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்து கயிறு கட்டி வழிபாடு நடத்தினால் அவர்கள் குடிபோதையில் இருந்து மீண்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் தாலுகா கொளத்தூர் அருகே உள்ள கருங்கல்லூர், மேட்டுப்பளையூர், வீரனூர், கோமாளிகாடு ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி, அம்மன் கோவில் ஒன்றை கட்டி வழிபாடு செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலையின் நடு மலையில் உள்ள ஒரு ஓடையில் அம்மன் சுயம்புவாக காட்சி அளிப்பதை கண்டனர்.

அப்போது பக்தர் ஒருவருக்கு அருள் வந்து, நான் அம்மன் சக்தியாக உருவாகி மந்தையில் இருந்து உருவானதால் நான் மத்தூர் மாரியம்மன் என்ற திருநாமத்தில் வீற்றிருப்பதாக அருள்வாக்கு சொன்னார். பின்னர் அங்கிருந்த சுயம்பு அம்மனுக்கு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டு மேட்டுப்பளையூர் கிராமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன.

கோடைகாலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்க மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என இந்த பகுதி கிராம மக்கள் மழை வேண்டி வழிபாடு செய்து இந்த மலை அம்மனை மத்தூர் மாரியம்மன் என அழைத்து வழிபாடு செய்து வருகின்றனர். ஸ்ரீ மத்தூர் மாரியம்மன் பல நோய்களை போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தையே தல விருட்சமாக கொண்டு சக்தியின் மற்றொரு நிலையாக அருள்பாலிப்பதாக கிராம மக்கள் நம்புகிறார்கள்.

குடிபோதைக்கு அடிமையானவர்கள் இந்த கோவிலுக்கு வந்து கயிறு கட்டி வழிபாடு நடத்தினால் அவர்கள் குடிபோதையில் இருந்து மீண்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கோவிலுக்கு வந்து கயிறு கட்டி வழிபாடு நடத்தி குடிபோதை என்னும் கொடிய தீய பழக்கத்தில் இருந்து மீண்டுள்ளதாக இந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News