செய்திகள்
நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி பின்னடைவு
முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் அவரது முன்னாள் உதவியாளர் சுவேந்து அதிகாரி களமிறங்கியதால் தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. பா.ஜனதா, ஏழு கட்சிகளின் ஆதரவுடன் தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் மேலும் ஐந்து கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ்-இடது முன்னணி கூட்டணி என்ற பெயரில் தேர்தலை சந்தித்தது.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 290 தொகுதிகளில் தனியாக நின்றது. கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவுக்கு மட்டும் 3 தொகுதிகள் கொடுத்தது. ஒரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இந்த தேர்தலில் பாஜக, திரிணாமுல் இடையே கடும் போட்டி நிலவியது.
முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அவரது முன்னாள் உதவியாளர் சுவேந்து அதிகாரி களமிறங்கினார். இதனால் நந்திகிராம் தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இதில் வெற்றி பெறுவது மம்தா பானர்ஜிக்கு கவுரவ பிரச்சனையாக கருதப்பட்டது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில், மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்தார். சுவேந்து அதிகாரி முன்னிலையில் இருந்தார்.
ஒட்டுமொத்த முன்னிலை நிலவரத்தை பொருத்தவரை, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக என இரண்டு அணிகளுமே கட்சிகளுமே கிட்டத்தட்ட நெருங்கி வந்தன. 9.30 மணி நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 130 இடங்களிலும், பா.ஜனதா 116 இடங்களிலும், காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி 4 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன. தொடர்ந்து கள நிலவரத்தில் மாற்றங்கள் வரலாம்.