ஆட்டோமொபைல்
நாடு முழுவதும் 200 நகரங்களில் பைக் டாக்சி உபெர் நிறுவனம் அறிவிப்பு
இந்தியா முழுக்க சுமார் 200 நகரங்களில் பைக் டாக்சி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக உபெர் தெரிவித்துள்ளது.
வாடகை டாக்சி, ஆட்டோக்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதற்கென்று உபெர், ஓலா போன்ற நிறுவனங்கள் பெரிய அளவில் செயல்பட்டு வருகின்றன. ஆன்லைன் மூலம் செல்போன் ஆப் வழியாக சென்று இதற்கு பதிவு செய்தால் உடனடியாக காரோ அல்லது ஆட்டோவோ அந்த இடத்துக்கு வந்து பயணிகளை ஏற்றி செல்லும்.
நாட்டின் பல்வேறு நகரங்களில் இந்த சேவையை குறிப்பிட்ட நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. தற்போது கார் மற்றும் ஆட்டோ சேவை மட்டுமே பெரும்பாலான நகரங்களில் கிடைக்கிறது. இதில், உபெர் நிறுவனம் மோட்டார்சைக்கிள் அல்லது ஸ்கூட்டரில் பயணிகளை ஏற்றி சென்று குறிப்பிட்ட இடத்தில் விடும் பைக் டாக்சி முறையை கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது.
இதன் மூலம் தினமும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயணம் செய்கிறார்கள். இதற்கும் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்த ஆண்டு 200 நகரங்களுக்கு விரிவுபடுத்த இருக்கிறது. இந்த திட்டத்தை செயல் படுத்த அந்தந்த மாநில அரசுகளிடம் அனுமதி பெற வேண்டி உள்ளது.
குறிப்பாக மராட்டியம், கர்நாடகா போன்ற பெரிய மாநிலங்களில் கூட இந்த திட்டம் அமல் படுத்தப்படவில்லை. அதை எல்லா மாநிலங்களிலும் கொண்டு வரும் வகையில் பல்வேறு நகரங்களில் செயல்படுத்த உபெர் திட்டமிட்டிருக்கிறது.
நகரங்களில் குறுகிய தூரத்துக்கு செல்லும் வகையில் பைக் டாக்சி அறிமுகப்படுத்தப்படும். குறைந்தபட்சம் 20 நிமிட நேரத்தில் பயண இடத்தை சென்றடையும் வகையில் பைக் டாக்சி சேவை இருக்கும். இதில், பணியாற்றுபவர்கள் மாதம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும்.
இந்தியாவை பொறுத்த வரை சுமார் 20 கோடி இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்தோனேசியாவில் பைக் டாக்சி முறை பிரபலமாக உள்ளது. அங்கு வாரத்துக்கு 2 கோடி பேர் பைக் டாக்சியில் பயணம் செய்கிறார்கள். இந்திய மக்கள் தொகையை ஒப்பிடும் போது, இந்தோனேசியாவின் மக்கள் தொகை 25 சதவீதம்தான் உள்ளது.
ஆனால், அங்கு பைக் டாக்சி தொழில் முன்னணி இடத்தில் இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவிலும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதே போல் ஆட்டோ சேவை திட்டமும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட இருக்கிறது. எதிர்காலத்தில் முக்கிய நகரத்தில் இருந்து குறிப்பிட்ட நகரங்களுக்கு பஸ் சேவைகளை இயக்கும் திட்டத்தையும் கொண்டு வர இருக்கிறோம். என அவர் கூறினார்.