செய்திகள்
மகாராஷ்டிரா முதல் மந்திரி பதவி ஏற்பு விழாவில் முக ஸ்டாலின் பங்கேற்பு
மகாராஷ்டிரா முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
மும்பை:
மகாரஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கின்றன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் முதல் மந்திரியாக சிவசேனா தலைவர் மற்றும் மகா விகாஸ் அகாடி தலைவரான உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்கிறார். இதற்கான நிகழ்ச்சிகள் நாளை மாலை 6.40 மணிக்கு மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெற உள்ளன. இதனையடுத்து விழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு சிவசேனா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ளும்படி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு மாநில காங்கிரஸ் முதல் மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பங்கேற்கிறார் என தகவல்கள் வெளியாகின.