செய்திகள்
கைது

விவசாயிகள் உதவி திட்டத்தில் முறைகேடு- வேளாண் உதவி அலுவலர் கைது

Published On 2020-09-25 09:23 GMT   |   Update On 2020-09-25 09:23 GMT
பிரதம மந்திரியின் விவசாயிகள் உதவி திட்டத்தில் முறைகேடு செய்ததாக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆற்காடு வட்டார வேளாண்மை அலுவலகத்தில் பணிபுரியும் உதவி வேளாண்மை அலுவலரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:

தமிழகத்தில் பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ரூ.120 கோடி வரை முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் விவசாயிகள் அல்லாத நபர்கள் இந்த திட்டத்தில் போலியாக சேர்ந்து உதவித்தொகை பெற்றது தெரியவந்தது. போலியாக சேர்ந்தவர்களிடமிருந்து பணம் திரும்ப வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் 3,242 பேர் விவசாயிகள் அல்லாதவர்கள் என்பதும், ரூ.1 கோடியே 23 லட்சம் முறைகேடு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்களின் வங்கி கணக்கில் இருந்து இதுவரை ரூ.70 லட்சம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வேளாண்மை துறையில் தற்காலிக கணினி ஆபரேட்டர்களாக பணியாற்றிய 8 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 20 பேர் பெயர் கொண்ட பட்டியலை வேளாண்மைத்துறை அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் வழங்கி உள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த மோசடி தொடர்பாக சோளிங்கர் வேளாண்மை அலுவலகத்தில் பணிபுரிந்துவந்த தற்காலிக கணினி ஆபரேட்டர் சுப்பிரமணி என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அதேபோன்று காட்பாடியில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வந்த சந்தோஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஆற்காடு வட்டார வேளாண் அலுவலகத்தில் உதவி வேளாண்மை அலுவலராக பணிபுரிந்துவந்த ராஜசேகர் என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைதுசெய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இவர் அந்தப்பகுதி விவசாயிகளின் பெயரில் போலியாக வங்கி கணக்குகளை சேர்ந்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இவருக்கு உதவியாக 2 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News