செய்திகள்
சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றிய வாலிபர் கைது
துவாக்குடியில் சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவெறும்பூர்:
சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் விஜய் (வயது23). இவர் திருச்சி மாவட்டம் துவாக்குடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இவர் 13 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகி கரூருக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த நிலையில் அரவக்குறிச்சியில் சுற்றித்திரிந்த இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் துவாக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடு்த்து துவாக்குடி போலீசார் அங்கு சென்று அவரை மீட்டு வந்தனர். மேலும் சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி அழைத்து சென்ற விஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.