உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் விசாரணை கைதி சாவு சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது
திருவண்ணாமலையில் விசாரணை கைதி சாவு சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இறப்பதற்கு முன்பு உடலில் காயங்கள் இருந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா இளையாங்குன்னியை அடுத்த தட்டராணை பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி (வயது 48) கூலித்தொழிலாளி.
இவரை கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு போலீசார் சாராய வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.
பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு உள்ளதாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.
தங்கமணியின் இறப்பிற்கு போலீசார் காரணம் என அவரது உறவினர்கள் உடலை வாங்காமல் மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். \மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் உடல் பரிசோதனை நடந்தது. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சம்பந்தமாக திருவண்ணாமலை மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வழக்கை விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ள்து. இந்த நிலையில் சென்னை சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
முதல்கட்டமாக பிரேத பரிசோதனை அறிக்கையில் உயிரிழந்த தங்கமணியின் வலது கையில் இரண்டு இடங்களிலும் இடது கையில் ஒரு இடத்திலும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த காயங்கள் இறப்பதற்கு முன்பு 12 மணிநேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் ஏற்பட்டுள்ளது.
மேலும் இடது கையின் பின்புறத்தில் சுண்டு விரலுக்கு அருகே உள்ள எலும்பில் ஆழமான ரத்தக்கட்டு உள்ளது. இந்த காயம் இறப்பதற்கு 6 மணி நேரத்துக்குள் ஏற்பட்டுள்ளது.
நாக்கு நடுப்பகுதியில் காயம் உள்ளது. இதேபோல் விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் 3 மற்றும் 4-வது விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டு இரத்த கட்டு உள்ளது என பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணையில் நடத்தி வருகின்றனர்.