ஏர்வாடி அருகே மூதாட்டியிடம் நகை-பணம் திருட்டு
நெல்லை:
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள அணைக்கரை கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி கமலா (வயது 66).
இவர் வீட்டு கதவை திறந்து வைத்துக் கொண்டு டி.வி. பார்ப்பதும், பகல் நேரம் தூங்குவதும் வழக்கம் என கூறப்படுகிறது.
கமலா நேற்று பகல் நேரம் தூங்கிய போது, உள்ளே புகுந்த மர்ம நபர், பீரோவில் இருந்த 3 பவுன் எடையுள்ள தங்க நகை மற்றும் ரூ.12 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு ஓடிவிட்டார்.
சிறிது நேரம் கழித்து செலவுக்கு பணம் எடுக்க கமலா பீரோவை திறந்தபோது, அங்கு பணமும் நகையும் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை செய்தனர்.
கைரேகைகள் பதிவாகி உள்ளதா? என்றும் ஆய்வு நடந்தது. இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.