செய்திகள்
கோட்சே பயங்கரவாதி அல்ல -பாஜக எம்.எல்.ஏ பேச்சு
நாதுராம் கோட்சே தவறு செய்துவிட்டார், ஆனால் அவர் பயங்கரவாதி அல்ல என பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்துள்ளார்.
லக்னோ:
மக்களவையில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய தி.மு.க உறுப்பினர் ஆ. ராசா, 'நாதுராம் கோட்சே அவர் கொண்டிருந்த சித்தாந்தத்தின் காரணமாக மகாத்மா காந்தியின் மீது காழ்ப்புணர்ச்சியில் இருந்தார். அதனால்தான் அவரைக் கொல்வதற்கு முடிவெடுத்தார்' என்று குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாக்கூர், 'தேசபக்தரை நீங்கள் உதாரணமாக குறிப்பிடக்கூடாது' என்று பேசினார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்களவையில் பிரக்யா தாக்கூரின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து பிரக்யா மக்களவை பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து உத்தர பிரதேச மாநிலத்தின் பல்லியா தொகுதி எம்.எல்.ஏ சுரேந்திர சிங் கூறுகையில், ‘கோட்சே தேசப்பிதா காந்தியைக் கொன்றிருக்கக்கூடாது. கோட்சே தவறு செய்தார். ஆனால் அவர் பயங்கரவாதி அல்ல. தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள்தான் பயங்கரவாதிகள்.’ என செய்தியாளர்களிடம் கூறினார்.
கோட்சே தேசபக்தரா என்று கேட்கப்பட்டதற்கு, எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் பதிலளிக்கவில்லை.