செய்திகள்
மைசூரு தசரா விழா கோலாகலம் - தங்க அம்பாரியில் ஊர்வலமாக செல்லும் சாமுண்டீஸ்வரி தேவி
அரண்மனையில் பாரம்பரியப்படி பல்வேறு பூஜைகள், கத்திபோடும் மல்யுத்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஊர்வலம் நடைபெற்றது.
மைசூரு:
கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் தசரா விழா உலக புகழ் பெற்றது. நவராத்திரி மற்றும் விஜயதசமியையொட்டி 10 நாட்கள் கோலாகலமாக இந்த விழா நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் தசரா விழா அக்டோபர் மாதம் 7-ந் தேதி தொடங்கியது.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் தசரா விழா எளிமையாக கொண்டாடப்படுகிறது. ஏராளமான கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. மைசூரு அரண்மனையில் மட்டும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. கொரோனா விதிகளை பின்பற்றி தசரா விழா கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வான தசரா ஊர்வலம் இன்று மாலை தொடங்கியது. அரண்மனையில் பாரம்பரியப்படி பல்வேறு பூஜைகள், கத்திபோடும் மல்யுத்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை முதல்வர் பசவராஜ் பொம்மை தொடங்கிவைத்தார்.
அபிமன்யு யானை, சாமுண்டீஸ்வரி தேவி வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து கொண்டு யானைகள் புடை சூழ வீறுநடை போட்டு கம்பீரமாக வந்தது. அதற்கு முன்பு குதிரைப்படை, ஒட்டகப்படை, போலீசார் அணிவகுப்பு, போலீஸ் இசைக்குழுவினரின் அணிவகுப்பு, கலைஞர்களின் ஆடல்-பாடல் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் 500 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.