உலகம்
உகாண்டாவில் சோகம் - பஸ் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் பலி
உகாண்டாவில் நடந்த பேருந்து விபத்தில் பலியான 20 பேரில் 7 சிறுவர்களும் அடங்குவர் என போலீசார் தெரிவித்தனர்.
கம்பாலா:
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள போர்ட் போர்டல் நகரில் இருந்து தலைநகர் கம்பாலாவுக்கு பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
போர்ட் போர்டல் நகருக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பஸ் சாலையில் தறிகெட்டு ஓடியது.
நெடுஞ்சாலையோரம் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் பாய்ந்த பஸ் பல முறை உருண்டு விபத்துக்குள்ளானது. இதில் பஸ் உருக்குலைந்து போனது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 7 சிறுவர்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.