வழிபாடு
பிரம்மோற்சவ விழா: அதிகாரநந்தி, காமதேனு, யானை, சிம்ம வாகனங்களில் சிவன், அம்பாள் உலா
பிரம்மோற்சவ விழாவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இவர்களுடன் விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி, சண்டிகேஸ்வரர், கண்ணப்பர் நான்கு மாடவீதிகளில் உலா வந்தனர். மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து நேற்று இரவு யானை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்டு தேர் வீதி வழியாக நேரு வீதி வரை உலா வந்து திருமண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.