செய்திகள்
15 லட்சம் இலக்குடன் விறுவிறுப்பாக நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்- பிற்பகல் நிலவரம்
கடந்த 12ந்தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டபோது, 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 12ந்தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், அதையும் தாண்டி 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் மையங்களில் 15 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்துகின்றனர். இந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் பிற்பகல் 3.30 மணி வரை 12.23 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.