தமிழ்நாடு
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16 ஆயிரத்து 400 கன அடியாக சரிவு

Published On 2021-12-08 03:47 GMT   |   Update On 2021-12-08 03:47 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் அணை நீர்மட்டம் கடந்த 25 நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு மீண்டும் நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று விநாடிக்கு 25 ஆயிரத்து 400 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 16 ஆயிரத்து 400 கன அடி வந்து கொண்டிருக்கிறது.

ஆனாலும் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பரிசலில் உற்சாகமாக சென்று இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள். ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 25 ஆயிரத்து 400 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் மேலும் சரிந்து 16 ஆயிரத்து 400 கன அடியாக வந்த கொண்டிருக்கிறது. அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த மாதம் 14-ந் தேதி முதல் அப்படியே காவிரி மற்றும் கால்வாயில் வெளியேற்றப்படுகிறது. அதன் படி இன்றும் அணையில் இருந்து காவிரியில் 16 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 400 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் அணை நீர்மட்டம் கடந்த 25 நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது. இதனால் மேட்டூர் அணை தொடர்ந்து கடல் போல காட்சி அளிக்கிறது.
Tags:    

Similar News