செய்திகள்
காளையார்கோவில் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது
காளையார்கோவில் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
காளையார்கோவில்:
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சிலுக்கப்பட்டி கிராமத்தில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையத்துக்குள் நேற்று அதிகாலை புகுந்த ஒருவர் எந்திரத்தை உடைத்து சேதப்படுத்தி பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார். அப்போது எச்சரிக்கை மணி ஒலித்ததால் அக்கம் பக்கத்தில் இருந்து பொதுமக்கள் ஓடிச் சென்று அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்தனர்.
பின்னர் இதுகுறித்து காளையார் கோவில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் குண்டாக்குடை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 52) என்பது தெரியவந்தது.
சம்பவம் குறித்து வங்கி மேலாளர் சுரேஷ் கண்ணன் அளித்த புகாரின் பேரில் காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற ஆறுமுகத்தை கைது செய்தனர்.