செய்திகள்
பெட்ரோலிய திட்டங்களை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி

புதிய இந்தியா, புதிய பீகாரை உருவாக்க நிதிஷ் குமார் மிகப்பெரிய பங்களிப்பு -பிரதமர் மோடி பாராட்டு

Published On 2020-09-13 09:50 GMT   |   Update On 2020-09-13 09:50 GMT
புதிய பீகார், புதிய இந்தியாவை உருவாக்கும் பணிகளில் நிதிஷ் குமார் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியிருப்பதாக பிரதமர் மோடி பாராட்டினார்.
புதுடெல்லி:

பீகாரில் பெட்ரோலியத் துறையின் மூன்று திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். பைப்லைன் இணைப்பு திட்டம், எல்பிஜி கேஸ் சிலிண்டர் நிரப்பும் இரண்டு ஆலைகளை துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், பீகார் முதல்வரின் பணிகளை வெகுவாகப் பாராட்டினார். 

‘அரசியல், பண நெருக்கடி உள்ளிட்ட சில காரணங்களால், பீகார் மாநிலம் பல ஆண்டுகளாக வளர்ச்சியில் பின்தங்கியிருந்தது. சாலை இணைப்பு, இணைய இணைப்பு பற்றி விவாதிக்கப்படாத ஒரு காலம் இருந்தது. நிலப்பரப்பு நிறைந்த மாநிலமாக இருப்பதால், பீகார் பல சவால்களை எதிர்கொண்டது. 

ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் சரியான அரசாங்கம், முடிவுகள் மற்றும் கொள்கைகளுடன் பீகார் வளர்ச்சி அடைந்துள்ளது. திட்டங்கள் ஒவ்வொருவருக்கும் சென்றடைகிறது. பீகாரில் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்காக நாம் பணியாற்றி வருகிறோம். புதிய பீகார், புதிய இந்தியாவை உருவாக்கும் நமது நோக்கத்தில் நிதிஷ் குமார் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியிருக்கிறார்’ என்று மோடி பேசினார்.

பீகாரில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. தற்போது பாஜக, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி ஆகிய கட்சிகள் கூட்டணியில் உள்ளன. ஆனால், நிதிஷ் குமார் முதல்வராக நீடிப்பது சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதால் கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

பாஜகவை சேர்ந்த ஒரு பிரிவினர், மோடியை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் யோசனை கூறினர். எனினும் நிதிஷ் குமார் தலைமையில் தேர்தலை சந்திக்க மாநில பாஜக தலைமை விரும்புகிறது.

இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி, நிதிஷ் குமாரை பாராட்டியிருப்பதன் மூலம், பீகார் தேர்தலில் நிதிஷ் குமார், பாஜக இணைந்து செயல்படுவது உறுதியாகியிருக்கிறது.
Tags:    

Similar News