செய்திகள்
பதான்கோட் விமானப்படைத்தளத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி
காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிவிட்டு டெல்லி திரும்பும் வழியில் பிரதமர் மோடி பதான்கோட்டில் உள்ள விமானப்படைத்தளத்தை ஆய்வு செய்தார்.
சண்டிகர்:
நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்ற பின்னர் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார்.
தீபாவளி நாளான இன்று காஷ்மீரின் ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் காவல் காக்கும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார்.
இந்நிலையில், தீபாவளி நாளான இன்று காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுடன் தனது தீபாவளியை கொண்டாடினார்.
அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி கூடியிருந்த ராணுவ வீரர்களுக்கு மத்தியில் உரையாடினார். பின்னர் வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கிய பிரதமர் அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.
தனது காஷ்மீர் பயணத்தை முடித்த பின்னர் அங்கிருந்து டெல்லி திரும்பும் வழியில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமானப்படை தளத்திற்கு சென்றார்.
அங்கு விமானப்படையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள அதிநவீன அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை அவர் ஆய்வு செய்தார். இதையடுத்து அங்குள்ள வீரர்கள் மத்தியில் உரையாடினார். மேலும் அங்கிருந்த வீரர்களுக்கு தீபாவளி இனிப்புகளை வழங்கி தனது மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார்.
இந்த பதான்கோட் விமானப்படை தளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பாதுகாப்புப்படையினர் உயிரிழந்தனர். அந்த தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அனைவரையும் பாதுக்காப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.