செய்திகள்
எலவனாசூர்கோட்டை அருகே அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது
எலவனாசூர்கோட்டை அருகே அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
எலவனாசூர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் எறையூர் கிராமத்தில் இருந்து அதையூர் செல்லும் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் மோட்டார் சைக்கிளில் நாட்டுத்துப்பாக்கிகளுடன் வந்த 3 பேரை பிடித்தனர். அவர்களின் சட்டையில் ரத்தக் கறைகள் படிந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் 3 பேரையும் உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த அருள் ஜோசப்(வயது 32), இருதய பவுல்ராஜ்(37), குழந்தைசாமி(40) என்பதும் நாட்டுத்துப்பாக்கிகளுடன் காட்டுக்கு வேட்டையாட சென்றுவிட்டு திரும்பி வந்தபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் 3 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கள்ளத்தனமாக நாட்டுத்துப்பாக்கியை தயாரித்து விற்பனை செய்ததாக சின்னசேலம் தாலுகா காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த சாமிதுரை(35) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து ஒரு நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.