ராஜாக்கமங்கலத்தில் குடிபோதை தகராறில் மனைவியை கொன்ற தொழிலாளி
ராஜாக்கமங்கலம்:
சாமிதோப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 45), கொத்தனார்.
இவருக்கும் ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் கோவில் புரத்தைச் சேர்ந்த சுஜா (45) என்பவருக்கும் இடையே திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பிறகு விஜயகுமார் மனைவி ஊரான கணபதிபுரம் கோவில் புரத்தில் வசித்து வந்தார். கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
கடந்த மாதம் 23-ந்தேதி விஜயகுமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே தகராறு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார் மனைவியை சரமாரியாக தாக்கினார்.
இதில் சுஜா மயங்கி கீழே விழுந்தார்.அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அவரது உறவினர் ஜஸ்டின் பால் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் விஜயகுமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த சுஜா நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ் லாரன்ஸ் ஆகியோர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விஜயகுமாரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட விஜயகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான சுஜாவின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. மனைவியை கணவன் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.