தொழில்நுட்பம்
இந்தியாவில் வாட்ஸ்அப் பேமெண்ட் சேவை - உற்சாகத்தில் மார்க் ஜூக்கர்பர்க்
இந்தியாவில் வாட்ஸ்அப் பேமெண்ட் சேவைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது உற்சாகம் அளிப்பதாக0 மார்க் ஜூக்கர்பர்க் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
வாட்ஸ்அப் செயலியில் பேமெண்ட் வசதியை வழங்க தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் அனுமதி வழங்கி இருக்கிறது. இதன் மூலம் வாட்ஸ்அப் மெசேஜிங் சேவையிலேயே பயனர்கள் உடனுக்குடன் பணம் அனுப்ப முடியும்.
வாட்ஸ்அப் பயன்படுத்தும் இரண்டு கோடி பேருக்கு முதற்கட்டமாக வாட்ஸ்அப் பேமெண்ட் வசதி வழங்கப்பட இருக்கிறது. இந்தியாவில் 2018 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட பேமெண்ட் வசதிக்கு தற்சமயம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. புதிய பேமெண்ட் வசதியை பயனர்கள் சாட் பாக்சில் இருந்தபடி பயன்படுத்த முடியும்.
இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் பேமெண்ட் வசதி வழங்கப்பட்டு இருப்பது பற்றி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்தியாவில் வாட்ஸ்அப் பேமெண்ட் வசதிக்கு அனுமதியளிக்கப்பட்டு இருப்பது உற்சாக உணர்வை ஏற்படுத்துகிறது என தெரிவித்தார்.
குறுந்தகவல் அனுப்புவதை போன்றே வாட்ஸ்அப் செயலி மூலம் பணம் அனுப்ப முடியும். இந்த சேவையில் 140-க்கும் அதிகமான வங்கிகள் இணைக்கப்படுகின்றன. வாட்ஸ்அப் என்பதால் பண பரிமாற்றங்கள் பாதுகாப்பாகவும் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.