செய்திகள்
கொலை

போடி அருகே கோழிப்பண்ணை ஊழியர் வெட்டி படுகொலை

Published On 2021-01-11 06:36 GMT   |   Update On 2021-01-11 06:36 GMT
போடி அருகே கோழிப்பண்ணை ஊழியரை கழுத்தை அறுத்தும், வெட்டியும் படுகொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள கீழசொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஒண்டிவீரன். இவரது மகன் ரவிக்குமார்(25). இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கோழிப்பண்ணையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். தனது காலில் எலும்பு முறிவு ஏற்படவே சிகிச்சைக்காக கடந்த வாரம் சொந்தஊருக்கு வந்தார்.

வீட்டில் இருந்தவாறே சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடிப்பார்த்தபோது ஊரின் பின்புறம் உள்ள மந்தைபகுதியில் ரவிக்குமார் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும், அரிவாளால் வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதைபார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் போடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி பார்த்திபன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது பெண் பிரச்சினையில் கொலை நடந்ததா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News