தஞ்சையில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் கலெக்டர் ஆய்வு
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி தெற்கு அலங்கம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமில் பெறப்பட்ட மனுக்கள் குறித்து அலுவலரிடம் மாவட்ட கலெக்டர் நேரில் கேட்டறிந்து இதுவரை பெறப்பட்ட மனுக்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனை சுற்றுச் சுவரில் மாநகராட்சியின் சார்பில் அரசு கவின் கலை கல்லூரி மாணவர்கள் மூலமாக சுவர் ஓவியங்கள் வரையப்பட்ட வருவதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு மாணவர்களிடம் ஓவியங்கள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு தடுப்பு வேலி அமைக்கும் பணியை விரைவாக மேற்கொள்ளவும் தடுப்பு அமைப்பினை மேலும் இரண்டு அடி உயர்த்தவும் அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும் யாகசாலை பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டார். முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் பாதைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், ஆர்.டி.ஓ. வேலுமணி, கும்பாபிஷேக குழுத்தலைவர் துரை திருஞானம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.