தொழில்நுட்பம்

இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கும் பி.எஸ்.என்.எல்.

Published On 2019-03-18 04:45 GMT   |   Update On 2019-03-18 04:45 GMT
பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் பிராட்பேண்ட் சேவையை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. #BSNL



பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு பிராட்பேண்ட் சேவையை இலவசமாக வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் சேவையை பயன்படுத்துவோருக்கு டேட்டா பலன்களுடன் கூடிய பிராட்பேண்ட் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.

புதிய சலுகை பி.எஸ்.என்.எல். சேவை வழங்கப்படும் அனைத்து வட்டாரங்களிலும் பொருந்தும். இதனை ஆக்டிவேட் செய்து கொள்ள வாடிக்கையாளர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு விடுக்க வேண்டும். இதுவரை அதிகாரப்பூர்வமாக சேவை துவங்கப்படாத ரிலையன்ஸ் ஜியோவின் பிராட்பேண்ட் சேவைக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். புதிய முடிவினை எடுத்திருக்கிறது.

பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 18003451504 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைப்பு விடுத்து பிராட்பேண்ட் சேவைக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ததும், பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களின் முகவரியில் கட்டணமின்றி பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்படும்.



வழக்கமான பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்துவோர் இதற்கென தனி கட்டணம் செலுத்த வேண்டும், அந்த வகையில் புதிய சலுகையின் பேரில் இந்த கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இலவச பிராட்பேண்ட் சேவை மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். மேலும் சில இலவசங்களை வழங்குகிறது.

இந்த இணைப்பின் மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 5 ஜி.பி. டேட்டாவினை இலவசமாக வழங்குகிறது. 5 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும், பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் பயனர்கள் கூடுதல் டேட்டாவிற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். தற்சமயம் வரை பி.எஸ்.என்.எல். நிறுவனம் பிராட்பேண்ட் சேவையை மட்டுமே இலவசமாக வழங்குகிறது. இதனால் பயனர்கள் கூடுதல் டேட்டாவிற்கு கட்டணம் செலுத்த வேண்டும். 

புதிய சலுகையின் மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிராட்பேண்ட் சேவையில் புதிய பயனர்களை சேர்க்க முயற்சிக்கிறது. இத்துடன் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஆண்டு சலுகைகளை வாங்கும் போது 25 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குகிறது. இந்த சலுகை டிசம்பர் 31, 2018 வரை அறிவிக்கப்பட்டு தற்சமயம் மார்ச் 31, 2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News