ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர்

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Published On 2020-11-17 08:04 GMT   |   Update On 2020-11-17 08:04 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) துர்க்கை அம்மன் உற்சவம் நடக்கிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும். விழா நாட்களில் சாமி மாட வீதியுலா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாட வீதியில் நடைபெறும் சாமி வீதி உலா ரத்து செய்யப்பட்டு, கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் உற்சவ நிகழ்ச்சிகளின் போது பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தீபத்திருவிழாவின் தொடக்கமாக எல்லை தெய்வ வழிபாடு 3 நாட்கள் நடைபெறும். அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் துர்க்கையம்மன் உற்வசம் நடக்கிறது. வழக்கமாக துர்க்கை அம்மன் உற்சவத்தின் போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதி உலா நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பக்தர்கள் அனுமதி கிடையாது.

தொடர்ந்து நாளை (புதன்கிழமை) பிடாரியம்மன் உற்சவமும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) விநாயகர் உற்சவமும் நடக்கிறது. 20-ந்தேதி காலை 5.30 மணியில் இருந்து 7 மணிக்குள் அருணாசலேஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து காலையிலும், இரவிலும் பஞ்சமூர்த்திகள் உற்சவ உலாவும் நடைபெற உள்ளது.

தொடர்ந்து 2-ம் நாள் விழாவில் இருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர், சந்திரசேகரர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் உலாவும் நடக்கிறது. 3-ம் நாள் விழாவான 22-ந்தேதி காலையில் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது. 6-ம் நாள் விழாவான 25-ந்தேதி காலையில் 63 நாயன்மார்கள் உற்சவ உலா நடக்கிறது.

7-ம் நாள் விழா அன்று (26-ந்தேதி) தேரோட்டம் நடைபெறும். அன்று பஞ்சமூர்த்திகள் உற்சவம் கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. 8-ம் நாள் விழா 27-ந்தேதி மாலையில் பிச்சாண்டவர் உற்வசம் நடக்கிறது.

கார்த்திதை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 29-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மதியம் சுப்ரமணியர் பிரம்ம தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் தீப தரிசனம் மண்டம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் இரவு பஞ்சமூர்த்திகள் உற்சவ உலாவும் நடக்கிறது.

மேலும் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் 30-ந் தேதியில் இருந்து 2-ந்தேதி வரை 3 நாட்கள் தெப்பல் உற்சவம் நடக்கிறது. இறுதியாக 3-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் கோவில் வளாகத்திற்குள் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் மூலம் செய்யப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News