உள்ளூர் செய்திகள்
கைலாசநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்
ராசிபுரம் கைலாசநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்
ராசிபுரம்:
ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. கோவிலின் சித்திரை தேர் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடந்து வருவது வழக்கம்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கடந்த 6-ம் தேதி கிராமசாந்தி நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தேர் திருவிழாவையொட்டி தினந்தோறும் கட்டளைதாரர்கள் சார்பில் சாமி ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் சாமிக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.
நேற்று காலையில் சாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது. பிறகு சாமி அம்பாள் ரதத்திற்கு எழுந்தருளல் நடந்தது. அப்போது சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று மாலையில் தேரோட்டம் நடந்தது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் கவரைத்தெரு வழியாக சென்று கடைவீதியில் பூக்கடை சந்திப்பில் நிறுத்தப்பட்டது.
தேரோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் செல்லப்பட்டு தேர் நிலை சேர்கிறது. வருகிற 20-ந் தேதி சப்தாபரண நிகழ்ச்சி நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சித்ரா, தக்கார் சுதா, ஆய்வாளர் ஜெயமணி ஆகியோர் செய்திருந்தனர்.