பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சோ குற்றவாளிக்கு 11 ஆண்டு சிறை தண்டனை
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் எரமநாயக்கன்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன்(53). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதேபகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவரை நைசாக பேச்சு கொடுத்து தனியாக அழைத்துச்சென்றார். பின்னர் அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும் இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதனையடுத்து முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் 21 பேர் சாட்சியம் அளித்தனர். இதனையடுத்து போக்சோ வழக்கில் கைதான முருகனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி புருஷோத்தமன் உத்தரவிட்டார். இதனையடுத்து முருகன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.