செய்திகள்
புத்தர் சிலையை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்த மோடி, மங்கோலிய அதிபர்

உலான்பாதரில் தங்க புத்தர் சிலை: மோடி- மங்கோலிய அதிபர் திறந்து வைத்தனர்

Published On 2019-09-20 10:08 GMT   |   Update On 2019-09-20 10:08 GMT
மங்கோலியாவில் உள்ள மடத்தில் நிறுவப்பட்டுள்ள தங்கத்திலான புத்தர் சிலையை இந்திய பிரதமர் மோடியும், மங்கோலிய அதிபரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தனர்.
புதுடெல்லி:

மங்கோலிய அதிபர் கால்ட்மாகின் பட்டுல்கா 5 நாள் பயணமாக இன்று இந்தியாவிற்கு வருகை தந்தார். டெல்லியில் அவர் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, மங்கோலிய தலைநகர் உலான்பாதரில் உள்ள கண்டன் மடத்தில் நிறுவப்பட்டுள்ள தங்கத்திலான புத்தர் சிலையை, இரண்டு தலைவர்களும் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தனர்.  புத்தர் கையில் கிண்ணம் வைத்திருப்பது போன்று இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் இல்லத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் மூத்த துறவி ஒருவர் பங்கேற்று, பிரார்த்தனை செய்து முறைப்படி சிலை திறப்பை அறிவித்தார். மோடியும், மங்கோலிய அதிபரும் பட்டனை அழுத்தி புத்தர் சிலையை திறந்து வைத்து வணங்கினர். பின்னர் புத்த துறவி மோடிக்கு பட்டாடை மற்றும் புத்தர் சிலையை வழங்கி கவுரவித்தார்.



இந்தியா-மங்கோலியா இடையிலான ஆன்மீக தொடர்பு மற்றும் புத்த பாரம்பரியத்தை பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

தற்போது தங்க புத்தர் சிலை திறக்கப்பட்டுள்ள கண்டன் மடத்திற்கு கடந்த 2015ம் ஆண்டு மோடி சென்றபோது, ஆன்மீக உறவின் அடையாளமாக போதி மரக்கன்றை வழங்கினார்.

19ம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட கண்டன் மடம், மங்கோலியாவின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான மடாலயம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News