செய்திகள்
கோப்புப்படம்

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 வயது சிறுவன் உள்பட 12 பேர் உயிரிழப்பு

Published On 2021-06-10 18:06 GMT   |   Update On 2021-06-10 18:06 GMT
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருச்சி, சேலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 12 பேர் உயிரிழந்தனர்.
திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் தினமும் அச்சுறுத்தும் வகையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 510 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 63,338 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 7,903 பேர் உள்ளனர். 1,097 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 54,719 ஆகும்.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருச்சி, சேலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 12 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 5 வயது சிறுவனும் ஒருவன் ஆவான்.

திருச்சியை சேர்ந்த அச்சிறுவன், மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் சைல்டு ஹெல்த் அண்ட் ஹாஸ்பிட்டலில் கடந்த 3-ந் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். இந்த நிலையில் அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

மேலும் 26 வயது இளம் பெண் ஒருவர் மற்றும் 3 பெண்களும், 7 ஆண்களும் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 716 ஆக உயர்ந்தது.

திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் வீடு திரும்பி வருவதால், படுக்கைகள் அதிக அளவில் காலியாக உள்ளன. தற்போது கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக அவசர சிகிச்சை பிரிவில் 56 படுக்கைகள், சாதாரண படுக்கைகள் 955 மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் படுக்கைகள் 480 என மொத்தம் 1,491 படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News