செய்திகள்
கொரோனா 2-வது அலையில் இதுவரை 19ஆயிரம் பேர் பாதிப்பு
கொரோனா 2-வது அலையில் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 19ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கடந்தவாரம் கொரோனா பாதிப்பு 2ஆயிரத்தை தாண்டியது. இதையடுத்து தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதன் காரணமாக தற்போது கட்டுக்குள் வர ஆரம்பித்துள்ளது.நேற்று ஒரே நாளில் 1,068 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 68,180ஆக அதிகரித்துள்ளது. 8பேர் பலியாகினர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 556ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது நகர் பகுதிகளை விட கிராமப்பகுதிகளில்தான் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதையடுத்து அங்கு கண்காணிப்பு குழுவினர் முகாமிட்டு தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
கிராம ஊராட்சிகளுக்கு நிதி கிடைக்காததால் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. எனவே உரிய நிதி ஒதுக்கி தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே கொரோனா 2-வது அலையில் திருப்பூர் மாநகரில் இதுவரை 19ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.