ஆன்மிகம்
கோட்டார் புனித சவேரியார் பேராலய வளாகத்தில் நடந்த தேர்பவனி
நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலய 8-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று இரவு தேர் பவனி நடந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஆலய வளாகத்தில் தேர்பவனி நடந்தது.
கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாகவும், உலகில் புனித சவேரியாருக்கு எழுப்பப்பட்ட முதல் பேராலயமாகவும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்தின் 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி, டிசம்பர் 3-ந் தேதி நிறைவு பெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. நேற்று 7-ம் நாள் திருவிழா நடந்தது. 8, 9, 10-ம் நாள் திருவிழாக்களின் போது தேர்ப்பவனி நடைபெறுவது வழக்கம். 8-ம் நாள் திருவிழாவான நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு ஆலய வளாகத்தில் தேர்ப்பவனி நடந்தது.
அதில் குறைந்த அளவிலான பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பயன்படுத்தியும் கலந்து கொண்டனர்.