செய்திகள்
ராஜபாளையம் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
ராஜபாளையம் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை பொதுமக்கள் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே யுள்ள சங்கரபாண்டியபுரம் லாப விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி செல்வி (வயது 25). நெசவு தொழில் செய்து வருகிறார்கள். செல்வி வீட்டில் தூக்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த வாலிபர் செல்வியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினான். செல்வி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர்.
நகையை பறித்துக்கொண்டு ஓடிய வாலிபரை மடக்கிப் பிடித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் நகையை பறித்தவர் ராஜபாளையம் ஆவரம்பட்டி ஒத்தப்பட்டி தெருவைச் சேர்ந்த அருண்குமார் (19) என்பது தெரியவந்தது.
அருண்குமார் அந்தப்பகுதியில் நடைபெற்ற ஜோதிடர் கொலை வழக்கிலும், பல்வேறு நகை பறிப்பு மற்றும் கொள்ளை வழக்கிலும் தொடர்புடையவன் என்பது தெரியவந்துள்ளது. போலீசார் அவனை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கடந்த 22-ந் தேதி ஜாமீனில் வெளிவந்த அருண்குமார் நகை பறிப்பில் ஈடுபட்டு மீண்டும் கைதாகியுள்ளான்.