செய்திகள்
சாலை பழுது-லாரியை வழிமறித்து பொதுமக்கள் வாக்குவாதம்
இருசக்கர வாகனங்களில் செல்வது மிகவும் சிரமமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் மடத்துகுளம் தாலுகா கணியூர் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட செங்கண்டி புதூர் வழியாக அதிகமாக லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் சாலையில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.
அதிகப்படியான டிப்பர் லாரிகள் இந்த வழிதடத்தை பயன்படுத்துவதால் சாலையில் பள்ளங்களும், புழுதியம் கிளம்புகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வது மிகவும் சிரமமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அந்த வழியாக திருப்பூருக்கு வந்த டிப்பர் லாரியை பொதுமக்கள் திடீரென வழி மறித்தனர். லாரி டிரைவருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் பொதுமக்கள் லாரிக்கு வழிவிடாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கணியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் டிப்பர் லாரி ஓட்டுநர்கள் உரிமையாளர்களிடமும் மறியலில் ஈடுபட்டி ருந்தவர்களுளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக இந்த வழியில் உள்ள சாலைகளை சரி செய்து தரப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
சாலையை உடனடியாக சரி செய்து தராவிட்டால் மீண்டும் பெரிய அளவில் போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்தவாறு அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்பகுதியில் பல மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.