புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் பா.ஜனதாவினர் மறியல் செய்ய முயற்சி
சேதராப்பட்டு:
கோட்டக்குப்பம் ரவுண்டானா முதல் கிழக்கு கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்புகளை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கடந்த சில நாட்களாக அகற்றி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினரின் அனுமதி பெற்று இன்று சின்ன முதலியார் சாவடி தீப்பாஞ்சான் கோவில் அருகே அப்பகுதியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகரின் இடத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி இன்று நடந்தது. இதற்கு இடத்தின் உரிமையாளரான பா.ஜனதா பிரமுகர் எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் பிரதமரை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த பா.ஜனதா நிர்வாகிகள் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்கள் பிரதமர் பற்றி அவதூறாக பேசிய அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த அதிகாரியை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் செய்ய முயன்றனர்.
இதுகுறித்து அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பா.ஜனதாவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுபற்றி புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாக பா.ஜனதா வினரை போலீசார் சமாதானப்படுத்தினர். இதையடுத்து பா.ஜனதாவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.