செய்திகள்
பண்டிகை கால மோசடி குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் - போலீசார் அறிவிப்பு
தீபாவளி நெருங்கி வருவதால் பொதுமக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
திருப்பூர்:
தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்கள், குறுஞ்செய்திகள், சமூக வலைதளங்கள் மூலம் வரும் பதிவுகள் உள்ளிட்டவற்றால் ஏமாற்றப்படக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, திருப்பூர் மாவட்ட போலீசார் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வங்கி அதிகாரி போல் பேசி ஏமாற்றுவது, குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதாக கூறுவது, செல்போன் டவர் அமைப்பதன் மூலம் வருவாய் பெற முடியும் என நம்ப வைப்பது, ஓ.டி.பி.,யை கேட்டு தெரிந்து கொண்டு கணக்கில் இருந்து பணம் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நடக்கின்றன.
பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். இது போன்ற இணைய வழி குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் 155260 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு புகார் கூறலாம்.
அல்லது, cybercrime.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம் எனவும் பேனர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தீபாவளி நெருங்கி வருவதால் பொதுமக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே விழிப்புணர்வு பேனர்களை வங்கிகள், தபால் நிலையம், பஸ் நிலையம்,ஏ.டி.எம்., உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.