ஆன்மிகம்
மகாலட்சுமி, குபேரனை கும்பிடுங்கள்

தீபாவளி அன்று மகாலட்சுமி, குபேரனை கும்பிடுங்கள்

Published On 2019-10-26 05:51 GMT   |   Update On 2019-10-26 05:51 GMT
தீபாவளி அன்று (நாளை) மகாலட்சுமியை வழிபடும் போது குபேரனையும் வழிபட வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மகாலட்சுமியை வழிபடும் போது குபேரனையும் வழிபட வேண்டும். குபேரன் யட்சர்களுக்குத் தலைவர் சாந்த குணம் கொண்டவர். இவர் ஸ்ரீராஜராஜேஸ்வரியின் பஞ்சதசீ மந்திரத்தை எப்பொழுதும் ஜெபித்தவாறு இருப்பார். இதனால் எல்லா சக்திகளையும் தன் வசம் கொண்டு பக்தர்களுக்கு வாரி வழங்கும் குணம் கொண்டவர்.

மகாலட்சுமியின் அஷ்ட சக்திகளில் இரண்டான சங்க நிதி, பதுமநிதியை குபேரன் ரட்சிக்கிறார். சங்க நிதி. பதுமநிதி இரண்டும் அளவில்லாத பொருட் செல்வத்தைக் கொண்டமையால் குபேரனின் இரு பக்கத்திலும் இவர்கள் எப்பொழுதும் வீற்றிருப்பார்கள். குபேரன், இலங்கேஸ்வரன் மற்றும் சூர்ப்பனகை ஆகியோரின் சகோதரன், மிகச் சிறந்த சிவ பக்தன் குபேரனுடைய இடை விடாத தவத்தால் சிவபெருமான் மனம் குளிர்ந்து வடக்கு திசைக்கு அதிபதியாக குபேரனை நியமித்தார்.

குபேர பட்டணமான அளகாபுரத்தில் அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர், மெத்தை, மீனாசனம் ஆகியவைகளின் மீது அமர்ந்து ஒரு கை அபய முத்திரையுடனும், கிரீடம் முதலிய சொர்ண ஆபரணங்களுடனும், முத்துக் குடையின் கீழ் சிம்மா சனத்தில் குபேரன் வீற்றிருக்கிறார். அவரது வலது புறம் சங்கநிதி, தன் இடது கையில் வலம்புரிச் சங்கும், வலது கை வரத்திரையுடனும் இருந்து அருள் தருகிறார். இடது புறத்தில் பதுமநிதி தன் வலது கையில் பத்மத்துடனும், இடது கை வரத்திரையுடனும் அருள் தருகிறார்.

சங்கநிதி, பதுமநிதி இரண்டும் ஆண் உருவங்கள், குபேரனுடைய இடது புறம் அவரது தர்மபத்தினி இடது கையில் கருநெய்தல புஷ்பம் ஏந்திய நிலையில் வலது கையில் குபேரனை அணைத்தவாறு காட்சி கொடுக்கிறார். குபேரன் ராஜயோகத்தை அளிக்கக் கூடிய தனலட்சுமியும், தைரிய லட்சுமியும் சர்வ சக்திகளாக குபேரனிடம் வாசம் செய்வதால் குபேரன் தனத்திற்கும், வீரத்திற்கும் ராஜாவாக இருக்கிறார்.

எந்தப் பூஜையின் முடிவிலும் ராஜாதிராஜன் எனப்படும் குபேரனை வணங்கியே பூஜையை முடிப்பது வழக்கம். லட்சுமி செல்வத்தின் அதிபதி தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் வரும். புது கணக்கு எழுதுபவர்கள் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்துவிட்டு நோட்டுப் புத்தகங்களின் மீது சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து மலர் தூவி பூஜை செய்து பிறகு வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள்.

வருத்தத்தால் மகா விஷ்ணுவைப் பிரிந்த மகாலட்சுமி விஷ்ணுவை திரும்பவும் சேர்ந்த இடம் ஸ்ரீவாஞ்சியம் என்ற தலம். நன்னிலத்திற்கு அருகில் உள்ளது. ஸ்ரீ என்றும், திரு என்றும் அழைக்கப்படும் மகாலட்சுமியை விஷ்ணு வாஞ்சையால் விரும்பி சேர்ந்த இடம் இத்தலம் என்பதால் இத்தலத்திற்கு ஸ்ரீவாஞ்சியம் (திருவாஞ்சியம்) என்ற பெயர் ஏற்பட்டது.

திருமால் தான் எங்கும் நிறைந்துள்ளதை விளக்க உலகில் உள்ள எல்லா அழகுகளையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மகாலட்சுமி. அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.

இந்திரன் மகாலட்சுமியை 4 பாகங்களாக நிலை பெறச் செய்தான். அவை பூமி, அக்னி, நீர் மற்றும் உண்மை பேசும் மனிதர்கள் இந்த இடங்களில் மகாலட்சுமி நிலையாக இருப்பாள். செல்வத்துக்கு அதிதேவதையாக இருப்பவள் மகாலட்சுமி அவளைப் பிராத்திப்பதால் நமக்கு தர்ம நியாயமாகக் கிடைக்க வேண்டிய சம்பவத்தைத் தந்து அனுக்கிரகம் செய்வாய். பணம் சம்பாதிப்பதில் தவறு இல்லை. அது கிடைக்கும் வழி நியாயமானதாக இருக்க வேண்டும். பணம் சம்பாதிப்பதைவிட அதை நல்ல வழிகளில் செலவிடுகிற, பிறர் நன்மைக்காகப் பணம் கொடுக்கிற மனப்பான்மைதான் முக்கியம். இந்த மனோபாவத்தை அருள வேண்டும் என்றும் மகாலட்சுமியை நாம் வேண்டிக் கொள்ள வேண்டும்.
Tags:    

Similar News