செய்திகள்
சென்னையை அதிர வைத்த கொலை... துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்ட குற்றவாளி
சென்னையில் குடும்ப பிரச்சனையில் 3 பேரை சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி, துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டது தெரியவந்துள்ளது.
சென்னை:
சென்னை சவுகார்ப்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வரும் தலில் சந்த் (வயது 74), அவரது மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் (38) ஆகியோர் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். மூவரும் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் படுக்கை அறையில் பிணமாக கிடந்தனர்.
சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், தலில் சந்தின் மருமகள் ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ் உள்பட 3 பேர் புனேயில் கைது செய்யப்பட்டனர். அவர்களை சென்னைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குடும்ப பிரச்சினையில் இந்த கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கைலாஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதிய தகவல் கிடைத்துள்ளது. கைது செய்யப்பட்ட கைலாஷ் காஞ்சிபுரம் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் தங்கி, துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கள்ளச் சந்தையில் சில துப்பாக்கிகளை வாங்கி வந்து சத்தம் குறைவாக கேட்கும் துப்பாக்கியை வைத்து பயிற்சி செய்ததாக கைலாஷ் தனது வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் முன்னாள் ராணுவ அதிகாரியின் கார் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் சென்னையில் கைலாஷ்க்கு யார் யாருடன் தொடர்பு? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.