செய்திகள்
கோப்புபடம்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம் - கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி

Published On 2021-02-15 08:39 GMT   |   Update On 2021-02-15 08:39 GMT
கள்ளக்காதலுக்கு இடையூ றாக இருந்ததால் கூலிப்படையை ஏவி கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மண்ணச்சநல்லூர்:

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அடுத்த இரூர் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 40). சாலை பணியாளரான இவர் நேற்று தனது பேத்தி பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சிறுகனூர் அருகே உள்ள சி.ஆர். பாளையத்திற்கு தனது மோட்டார்சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் இரூருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள பைந்தமிழ் தோட்டம் என்ற பகுதி அருகே சென்ற போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் முத்துவை வழிமறித்து கீழே தள்ளினர். பின்னர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே முத்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முத்துவை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள், நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட முன் விரோதத்தில் முத்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் முத்துவின் மனைவி மகாலட்சுமிக்கும் சி.ஆர்.பாளையத்தை சேர்ந்த ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதற்கு முத்து இடையூறாக இருந்ததால் மகாலட்சுமியே கூலிப்படையை ஏவி முத்துவை கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து தலைமறைவான மகாலட்சுமி மற்றும் கூலிப்படையை சேர்ந்த கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் முத்து கொலைக்கான காரணம் குறித்து மேலும் பல்வேறு தகவல்கள் கிடைக்கும். இதையடுத்து அவர்களை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News