செய்திகள்
நகை பறிப்பு

விழுப்புரத்தில் பட்டப்பகலில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு - 3 பேருக்கு வலைவீச்சு

Published On 2021-10-10 09:24 GMT   |   Update On 2021-10-10 09:24 GMT
விழுப்புரத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் சுதாகர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராதா மனைவி சுகுணா (வயது 57). இவர் நேற்று காலை அதே பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள், திடீரென சுகுணாவின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்தனர். உடனே அவர் திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். அதற்குள் அந்த வாலிபர்கள் 3 பேரும் நகையுடன் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

இதுகுறித்து சுகுணா, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News