மகள் பற்றி ஆபாசமாக பதிவிட்ட ‘டிக்டாக்’ பிரபலம் கைது
சென்னை:
சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் அமுதபிரியா. டிக்டாக் பிரபலமான இவர் கணவரை பிரிந்து வாழ்கிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற வாலிபர் இவரது ஆண் நண்பராக உள்ளார். இருவரும் சேர்ந்து அமுதபிரியாவின் மகள் பற்றி இணையதளங்களில் ஆபாசமாக பதிவுகளை வெளியிட்டனர்.
33 வயதான அந்த பெண் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தாயின் ஆபாச பதிவுகள் அவருக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தின.
இதுபற்றி அவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் கனகராஜ் மேற்பார்வையில் சப்- இன்ஸ்பெக்டர் நாட்டாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அப்போது அமுதபிரியா, தனது மகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இது போன்று ஆபாச தகவல்களை பதிவிட்டது தெரிய வந்தது.
இதற்கு அமுதபிரியாவின் ஆண் நண்பர் ராஜேஸ் தூண்டுதலாக இருந்துள்ளார். இதையடுத்து இருவர் மீதும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இருவரும் கைது செய்யப்பட்டனர். டிக்டாக் பிரபலமான அமுதபிரியா டிக்டாக்கில் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அவரை டிக்டாக் ரசிகர்கள் அமுதா அம்மா என்று அழைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் மகள் என்றும் பாராமல் ஆபாசமாக பதிவிட்டு கைதாகி உள்ள அமுதபிரியாவுக்கு சமூக வலைதளங்களிலும் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இப்படியும் ஒரு தாயா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.