செய்திகள்
பெரம்பலூர் அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சிறுவன்-வாலிபர் கைது
பெரம்பலூர் அருகே முகவரி கேட்பது போல் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சிறுவன் மற்றும் வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருச்சி:
பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூர் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மகள் கவுசல்யா (வயது 24). இவர் பகல் 10 மணியளவில் பெரம்பலூர் செல்வதற்காக பாடாலூர் அருகே உள்ள சந்தைப்பேட்டை பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கவுசல்யாவிடம் வந்து முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்துள்ளனர். இதில் திடீரென முன்னால் இருந்த வாலிபர் கவுசல்யாவின் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்றார்.
உடனே கவுசல்யா கூச்சல் போட சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து நகையை பறிக்க முயன்ற இருவரையும் பிடித்து சரமாரியாக தாக்கி அருகிலிருந்த பாடாலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை விசாரித்து பார்த்ததில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த விஜயகுமார் (வயது 19) மற்றும் கரன் (13) என்பது தெரியவந்தது. இருவரையும் பாடாலூர் போலீசார் கைது செய்தனர். கரன் சிறுவனாக இருப்பதால் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.