செய்திகள்
ஆப்கானிஸ்தான்: தலிபான்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 8 குழந்தைகள் பலி
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் விளையாடிக்கொண்டிருந்த 8 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும், பொதுமக்களை கொடுமைப்படுத்துவதுடன் வன்முறை தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.
பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் அந்நாட்டு அரசுப்படை மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி, தரைவழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பயங்கரவாத குழுக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.
இதற்கிடையில், அந்நாட்டின் பர்யாப் மாகாணத்தின் பஷ்டுன் கோட் மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதியில் உள்ள சாலையில் தலிபான் பயங்கரவாதிகள் கண்ணிவெடிகளை பதித்து வைத்திருந்தனர்.
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் சிலர் இன்று கண்ணிவெடிகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சாலை அருகே விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அந்த கண்ணிவெடிகள் திடீரென வெடித்தது. இந்த தாக்குதலில் 8 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சில குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.