இந்தியா
கல்லூரி மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த காதலன்

கல்லூரி மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த காதலன்- மயக்கமடைந்ததும் தூக்கிலிட்டு கொன்றனர்

Published On 2022-05-06 12:28 GMT   |   Update On 2022-05-06 12:28 GMT
பெண்களை கடத்திச் சென்று பலாத்காரம் செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் சத்தியசாயி மாவட்டம், நல்ல பள்ளியை சேர்ந்த 22 வயது மாணவி. இவர் திருப்பதியில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி 3ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சாதிக். இருவரும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திருப்பதிக்கு வந்த சாதிக் கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி காரில் மல்ல பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

அங்குள்ள விடுதி அறைக்கு கல்லூரி மாணவியை அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே திட்டமிட்ட படி தனது நண்பர்களை அந்த அறையில் தங்க வைத்திருந்தார்.

மதுபோதையில் இருந்த நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவியை அறையில் அடைத்து வைத்து 2 நாட்களாக பலாத்காரம் செய்தனர்.

இதனால் மாணவி சோர்வடைந்து மயக்கமடைந்தார். இதையடுத்து மாணவியை மின்விசிறியில் தூக்கிலிட்டு கொலை செய்தனர்.

பின்னர் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக அங்குள்ள போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது மாணவியின் கால்கள் கட்டில் மீது படர்ந்தபடி இருந்தது.

இதனால் சாதிக் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர்.

மேலும் மாணவியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் மாணவியை பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது.

இதற்கிடையே மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவி பலாத்காரத்தில் ஈடுபட்ட சாதிக் மற்றும் அவரது நண்பர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், அதுவரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

போலீசார் சாதிக்கை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News